Tuesday, 5 July 2011

அண்ணன் தங்கத்துரை


05.07.1997 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வு முடிவுற்றதும் வீடு நோக்கி திரும்புகையில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.அன்றைய தினம் மேற்படி கல்லூரியில் சமகாலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் கைக்குண்டு தாக்குதலில் மேற்படி கல்லூரி அதிபர் உட்பட ஐவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

17.01.1936 இல் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் பிறந்த அ. தங்கத் துரை தனது ஆரம்ப கல்வியை திஃ கிளிவெட்டி அ. த. க. பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1979 – 1980 இல் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை கற்று சட்டத்தரணியானார்.

நீர்ப்பாசன திணைக்களத்தில் லிகிதராக (எழுதுநர்) அரச நியமனம் பெற்ற அ. தங்கத்துரை சோமபுரம், இரத்தினபுரி, கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார்.கொழும்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பிரதம லிகிதராக கடமையாற்றிய சமயம் இலங்கையின் சிங்கள மொழிச் சட்டத்திற்கமைவாக 1970 இல் அமரர் அ. தங்கத்துரை அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அ. தங்கத்துரை அவர்கள் அப்போது மூதூர் தொகுதி தமிழ் பிரமுகர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கி 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார்.

பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்கள் பணியே மகேசன் பணி என்னும் தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மூதூர் தொகுதி மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அளப்பரிய சேவையாற்றினார்.புன்னகை ததும்பிய சிரித்த முகத்துடன் எவரையும் வரவேற்று அவர்களுடன் மனம் விட்டு பேசி அவர்களின் துயர் துன்பங்களை அறிந்து சேவை செய்யும் இயல்புடைய அரசியல்வாதியாக அ. தங்கத்துரை விளங்கினார். இவர் எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் கோபம் கொண்டு பேசியது கிடையாது. எதிரியையும் நேசித்து நன்மை புரிந்தவர் இவர்.

அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1970 – 1977 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது மூதூர் தொகுதியின் அபிவிருத்திக்காக பல வகைகளில் சேவையாற்றியுள்ளார். வீதி அபிவிருத்தி, பாலங்கள் நிர்மாணம், நீர்ப்பாசனத் துறை சார்ந்த அபிவிருத்தி, சமூகப் பொருளாதாரத் துறை சார்ந்த அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்த அபிவிருத்தி முதலானவற்றை அப்போது மூதூர் தொகுதியில் மேற்கொண்டார்.
மூதூர் தொகுதியில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் அ. தங்கத்துரை தனது பதவிக் காலத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டார்.தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பேசவும் எழுதவும் அ. தங்கத்துரைக்கு ஆற்றல் இருந்தமையால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொது மக்களுடைய பல்வேறு அரசதுறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது.

அமரர் அ. தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970 – 1977 காலப் பகுதியில் பதவி வகித்துள்ளார்.இலங்கை அரசின் தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கையினால் இரட்டை அங்கத்துவப் பாராளுமன்ற தேர்தல் தொகுதியாகவிருந்த மூதூர் தேர்தல் தொகுதி 1977 இல் ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இதேவேளையில் திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களின் நலன் கருதி அன்றைய 1970 – 1977 அரசினால் சிங்கள மக்களுக்காக புதிய சேருவில தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.இதன் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது.

இதனால் அமரர் தங்கத்துரையை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலையேற்பட்டது.இந்நிலையில் 1970 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த அமரர் பா. நேமிநாதன் அவர்கள் 1977 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதை தவிர்த்து அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களை திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

பொதுமக்களினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர் சிலரதும் மேற்படி முயற்சி கைகூடாததால் அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவில்லை. இருந்தும் அதே ஆண்டில் மூதூர் தொகுதி தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர் எஸ். எம். மக்கீனுக்கு ஆதரவாக அ. தங்கத்துரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இவரையும் பொலிசார் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவரைக் கைது செய்ததால் இவர் திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் (8) எட்டு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விடுதலையானார்.
1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவர் வேட்பாளராகப் போடியிட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை மக்கள் தொண்டனாக திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு சேவை செய்தார். திருகோணமலை மாவட்ட சமூகப் பொருளாதார, கல்வி கலாசார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை துறந்த இவர் திருகோணமலை மாவட்ட மக்களுடன் மக்கள் தொண்டனாக திருகோணமலையிலே வாழ்ந்தார்.1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இவர் மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளையாற்றி வந்தார்.இந்நிலையில் தான் 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐந்தாம் திகதி (05.07.1997) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவினை தொடர்ந்து பயங்கரவாதியினால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அமரர் தங்கத்துரை மரணித்த போதும் அவர் திருகோணமலை மாவட்டத்திற்கும் மாவட்ட மக்களுக்கும் செய்த சேவைகள் மக்கள் மனதைவிட்டு நீங்கவில்லை. அன்னாரது சேவைகள் மக்கள் மனதில் நிரந்தரமாக பதிந்துள்ளன
கோ.திரவியராசா

Wednesday, 22 June 2011

Koddiyaram Poem by Prof Sukumar.mpg

கொட்டியாரம்-1

கொட்டியாரம் -2

கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் மண்ணின் சிறப்புகளை உலகறியச் செய்யும்

கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் மண்ணின் சிறப்புகளை உலகறியச் செய்யும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இரவிச்சந்திரன்
"கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் மண்ணின் சிறப்புகளை உலகறியச் செய்யும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இரவிச்சந்திரன்
கொட்டியாபுரப் பற்று மண்ணிலே நிறைந்துள்ள ஆற்றல் மற்றும் கலைச்சிறப்புகளை உலகறியச் செய்தவர் கிழக்கப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் கலைப்பிரிவு பீடாதிபதியான பாலசிங்கம் பாலசுகுமார் என்று கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.இரவிச்சந்தின் தெரிவித்தார்.

பாலசுகுமாரின் “கொட்டியாரம் இலக்கிய மரபுகள்’ என்ற நூல் மற்றும் அவரது பாடல் இறுவெட்டு ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வு மூதூர் கிழக்கு சேனையூர் மத்தியகல்லூரியின் கலாசார மண்டபத்தில் கல்லூரி அதிபர் இரா.இரத்தினசிங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.
2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின்போது உயிரிழந்த பாலசுகுமாரின் புதல்வியின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வரும் அனாமிக்கா பதிப்பகத்தின் பதினாறாவது வெளியீடாக "கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் வெளியீடு அமைகின்றது. விரிவுரையாளர் இரவிச்சந்திரன் தெடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;

பாலசுகுமார் பன்முக ஆளுமையைக் கொண்ட ஆசான். தம்மிடம் கற்றவர்களுக்கு அறிவு ரீதியாக ஆலோசனை கூறி வழிநடத்தியுள்ளார். கொட்டியாரம் மண்ணின் வரலாற்றை, அதன் பெருமையை அறிந்து கொள்வதற்கு இவ்வெளியீடு வரலாற்று மாணவருக்கு உதவும். பாலசுகுமாரால் எழுதப்பட்ட பாடல்கள் இந்தியாவில் இசையமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இறுவட்டாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

வெளியீட்டு நிகழ்வை ஒழுங்கு செய்திருந்த கலைஇலக்கிய அமைப்பின் தலைவரும் அதிபருமான வி.நவரட்ணராஜா தனது வரவேற்புரையில் பாலசுகுமார் லண்டனில் வாழ்ந்து வந்தாலும் அவரது எண்ணம், உணர்வுகள் கொட்டியார மண்ணில்தான் உள்ளன. அவர் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அவரின் நூல் மூலம் அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். பாலகுமார் லண்டனிலிருந்து ஒளித்திரை மூலம் நேரலையாக நிகழ்வில் உரையாற்றினார்.

முதன்மை அதிதியாக மூதூர் வலயக்கல்வி அலுவலகம் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் சி.சிறிதரன் பங்குபற்றினார். ஆய்வுரைகளை விரிவுரையாளர்கள் இரவிச்சந்திரன், எஸ்.குகன் ஆகியோர் நிகழ்த்தினர். இறுவட்டை இரவிச்சந்திரன் வெளியிட்டார். அவற்றை பாலசுகுமாரின் தயார் பாலசிங்கம் தெய்வநாயகி, மாமியார் திருமதி சோமசுந்தரம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் மூதூரின் மூத்த இலக்கியவாதி எம்.எஸ்.அமானுல்லா உட்பட கல்விமான்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்குபற்றினர். அனாமிகா பதிப்பகத்தினால் வெளியிடப்படும் இலக்கிய ஆக்கங்களினால் வரும் நீதியின் கொட்டியாரத்தில் நூலகம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Sunday, 19 June 2011

வலிகளால் ஒரு வரலாற்று தேடல்

'அனாமிகா' பதிப்பகத்தின் பதினைந்தாவது வெளியீடாக விளைந்த 'கொட்டியாரம் இலக்கிய மரபு' எனும் தொகுப்பு நூல் ஒரு வரலாற்றின் தடங்களை, தமிழின் பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிக்கொணரும் ஓர் ஆவணப்படுத்தலின் ஆரம்பமாக வெளிவந்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைகலாசார பீடாதிபதி பாலசுகுமார் அவர்களின் மற்றொரு அடயாளப் பொக்கிசமான 'கொட்டியாரம்' தொகுப்பாக அமைந்த இந்நூலில் பிரமிளா சுகுமார் அவர்களின் அற்புதமான பதிப்புரையே செல்வச்சிறப்பு மிக்க எழில்கொஞ்சும் எல்லா வளமும் கொண்ட அந்த கொட்டியாரப்பூமியின் மண்ணின் மணத்தைச் சொல்லும் அழகு அருமை.
எல்லோருக்கும் கிட்டாது என நினைக்கிறேன். தோட்டங்கள், பண்படுத்திய நிலம், விளைந்த நெல்மணிகள் என்றும் மருதம், நெய்தல், முல்லை மூன்றும் குழைந்து எழுந்த அந்த புன்னிலம் 'கள்ளம் கபடமில்லாம நல்ல மக்கள், மரியாதை, பண்பு, உபசரிப்பு என்று எல்லா பழக்கங்களும் என்னுள் வந்து செறிய' என்ற வசனமே அத்தனை நெருசல்களில் அகப்பட்ட மனதை இலகுவாக்கி மண்ணின் பெருமையை பறைசாற்றும்.

அடுத்து முன்னுரையை பாலசுகுமார் அவர்கள் அழகாக தொகுத்து இருக்கிறார். தாய்நிலத்தின் தொன்மையையும் அதனோடு இணைந்த அத்தனை ஊர்களையும் அவற்றின் சிறப்புக்களையும் சொல்லும் அழகில் நமக்கு அந்த நிலத்தை சென்றுவந்த ஒர் உணர்வு பீறிட்டு எழும். அந்த அழகும் வளமும் நிறைந்த நித்திலத்தை வாசிப்பில் நுகரமுடியாது உணர்வின் உரசல்களில் தான் அந்த கனம் தெரியும். ஆனாலும் முன்னுரையே முழுசாக விளைந்த நெல்மணியாகிறது.

கொட்டியாரம் வரலாற்று அறிமுகம் என்று ஆரம்பிக்கும் வரலாற்று ஆய்வில் கிறிஸ்துவுக்கு முன்னைய மற்றும் பிந்திய காலப்பகுதியில் சான்றுகளை விளக்கி கொட்டியாரத்தின் புராதனத்தை அதன் தொன்மையை வெளிக்கொணர கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், செப்பேடுகள், பழைய கட்டட சிற்ப மற்றும் இடிபாடுகள் என்று அத்தனை விடயங்களினூடு சான்றுகளை அடுக்கிக்கொண்ட கட்டுரை அற்புதமான ஆய்வாகவும் அதனிறுதியில் சொல்லியிருக்கும் ' கொட்டியாரத்தின் வரலாறு தனியொரு நூலாக வருகிறபொழுது மேலும் விரிவான விளக்கங்களைப் பெறமுடியும். இது ஒரு அறிமுகக்குறிப்பே' என்று சொல்லும் போதே இந்நூலின் தொடர்ச்சியானதன்மையை வெளிக்காட்டிநிற்கிறது.

கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் எழுதிய 'கொட்டியாரப்பற்றுப் பிரதேசத்தின் பொருளாதார வளவாய்ப்புக்கள்' என்ற ஆய்வுக கட்டுரையில் இம்மானிலத்தின் செல்வச்செழிப்பான பொருளாதாரத்தை, பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மக்கள் மேற்கொள்கின்றனர் என்பதை தௌ்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

அடுத்து மண்சார்ந்த மக்கள் என்ற சொற்றொடரே மக்களின் காலக்கண்ணாடியாக இருக்கும் இலக்கியங்களின் அத்தனை வெளிப்பாடுகளையும் மக்கள் எவ்வாறு எவ்வகையான இலக்கியங்களை மேற்கொண்டனர் என்பதை மண்மொழி இலக்கியங்கள், மரபுசார் சிற்றிலக்கியங்கள், தொல்சீர் இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாடகம் என்னும் பகுப்புக்களாகப் பிரித்து அழகாக எளிமையாக சிறப்பாக முற்குறிப்போடு சொல்லியிருக்கும் பாங்கு இந்நூலின் மற்றொரு சிறப்பு. 'மண்மொழி இலக்கியங்களில்' கிழக்குமாகாணத்துக்கே தனித்துவமான நாட்டார் இலக்கியக்கூறுகள் பலவற்றின் சிலவற்றை இப்பகுப்பில் காணலாம். உழவு, கொம்பு, வசந்தன், கும்மி, கும்ப விழா போன்றவற்றில் இடம்பெறும் பாடல்களில் சிலவற்றை அச்சுருவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல் பள்ளு, குறவஞ்சி, உலா போன்ற மண்சார் மரபிலக்கியங்களில் காணப்படும் குளிர்த்தி, காவியம், தாலாட்டு, அகவல், மான்மியம், ஊஞ்சல் போன்றவை மரபுசார் சிற்றிலக்கியங்களின் சில கொட்டியார மண்ணின் மைந்தர்களால் பாடப்பட்ட காவியங்கள், அம்மன் பாடல்கள் என்பன இப்பகுப்பில் அடங்குகின்றன. இங்கே யுத்த சூழ்நிலைகளால் அழிந்துபோனவைகள் போக மீதியில் பொறுக்கி எடுக்கப்பட்டவைகளின் சிலவற்றை இங்குகாணலாம். ' காலம் அழித்ததுபோக மீதியாக இருப்பற்றை தேடிப்பாதுகாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இளம் சந்ததியினர் ஈடுபடவேண்டும்' என்று சொல்லும்போதே இளம் சமுதாயத்துக்கு விடப்பட்டுள்ள இந்த இலக்கியச் சங்கிலித் தொடரை தொடர்பறா நிலையில் பேணவேண்டும் என்பதை காட்டிநிற்கிறது.

அடுத்து இடம்பெறும் தொல்சீர் இலக்கியங்கள் என்ற பகுப்பில் தமிழில் வழியான காவியமரபு பற்றிக்குறிப்பிட்டு அங்கே கொட்டியாரத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆடிஅமாவாசை விழாவில் படித்து பயன்சொல்லும் திருக்கரைசைப் புராணத்தின் சில அழகான பாடல்களை அச்சுருவேற்றம் செய்தமை அற்புதம்.

நாவல்கள் என்ற பகுப்பில் முழுமையாக எந்த நாவலும் இடம் பெறாமல் சில நாவல்களின் சுவைமிகு குறிப்பிட்ட பகுதிகளை இணைக்கபட்டுள்ளது. கலாநிதி வ.அ.இராசரெத்தினத்தின் வாழ்வின் கண்ணாடியான நாவல்களில் இப்பிரதேசத்து சிறப்பையும் வரலாற்றையும் எடுத்தியம்பக்கூடியதாக இருப்பதனால் அவரது நாவல்களின் ஒரு சில பகுதிகளை இப்புத்தகத்தின் வாயிலாக நாம் காணலாம். அடுத்து சிறுகதைகள் என்ற பகுப்பு. இங்கே ஈழத்து சிறுகதைகளின் ஆரம்ப படையல்களைத் தந்த இலங்கையர்கோன் கொட்டியாரப்பிரதேசத்தில் அரச அதிகாரியாக கடமைபுரிந்தவர் என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் என்பது அவரது சிறுகதைகளில் மண்ணின் நடத்தைசார் பாதிப்புகளை எடுத்துக்காட்டியதை கொட்டியாரத்தின் சிறப்பை நுகரலாம். அத்தோடு சிறுகதைகளுக்கு மேற்கோள் காட்டும் வண்ணம் 'ஈழத்து சிறுகதை மன்னன்' கலாநிதி வ.அ. இராசரெத்தினம் அவர்களதும், மூதூர் அ.ச. பாய்வா மற்றும் கேணிப்பித்தன் அவர்களதுமான சில சிறுகதைகளை கொண்ட இப்புத்தகம் மெருகேறி வாசிக்கத்தூண்டும் ஒரு இலக்கியப்படைப்பாக நிற்கும்.

'கவிதைகள்' என்கிற பகுப்பில் மரபு மற்றும் புதுக்கவிதைகளை ஆக்கிய அத்தனை கொட்டியாரப்படைப்பாளிகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் முனைப்பில் அப்படைப்பாளிகளின் சில சிறப்பான கவிதைகளை காலத்தின் வடுக்களில் கொட்டியாரம் பட்ட அவஸ்தைகளையும் சமூகத்தின் அத்தனை காலப்பகுதிகளிலும் அடைந்த துயரங்களையும் கண்முன்னே கொண்டு வந்து கண்களில் கண்ணீரை உதிர்க்கும் மனதையும் நெஞ்சில் கனத்தையும் காட்டிநிற்கும் கவிதைகளுக்கு ஒரு வணக்கம்.

கடைசியில் பண்பாட்டுக்கலைகளின் வளர்ச்சியில் ஒரு தமிழ்க்கிராமத்து மண்ணின் வெளிப்பாடாக எழுந்த 'கூத்து' அக்கொட்டியாரப்பூமியிலும் அண்ணாவிமார்களால் பயிற்றப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எழுந்த நாடகக்கலைகளை கொட்டியாரப் பிரதேசமும் கட்டிக்காத்து பல இசைக்கழகங்களால் மேடையேற்றப்பட்டன என்பதை நிரூபிக்கும் வண்ணம் அப்பிரதேசத்தில் எழுந்த நாடகங்களில் சிலவற்றை இத்தொகுப்பில் இணைத்து ஒரு பண்பட்ட கலாசாரத்தின் தமிழின் இன்ப இலக்கியங்ளை வெளிக்கொணர்ந்து மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட இந்த தொகுப்பு நூல் இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு தமிழ் இலக்கிய வாண்மையைக் கொண்டுசெல்லக்கூடிய தன்மையைக் காட்டி நிற்கிற